150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு ரூ.100 கோடியில் புது கட்டிடங்கள் கட்ட அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: 150 ஆதிதிராவிடர் நல  பள்ளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், 8.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, “ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1138 பள்ளிகளில் பயிலும் 83,259 மாணாக்கரின் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டும், மாணாக்கரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும், 150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ரூ.100 கோடி மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் உள்ள 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 15 ஆய்வகக் கட்டடங்களை கட்டித் தருவதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: