ஊத்துக்கோட்டை: திடீர் மழையின் காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து 1,600 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியின் கொள்ளளவு 281 மில்லியன் கனஅடி. மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் தற்போது 280 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 280 மில்லியன் கனஅடிக்கு மேல் நீர் இருப்பு அதிகமானதால் தண்ணீர் திறக்கப்பட்டது. பிச்சாட்டூர் ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு 1,500 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.