லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரியில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதிச்செயல் என்று சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவித்திருக்கிறது. திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி அக்டோபர் 3- ஆம் தேதி லக்கிம்பூர் கெர்ரியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது. அப்போது, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா பயணம் செய்த ஜீப் விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதின் பின்பு ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.