பெய்ஜிங்: உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு உறுதியாகி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை பாடாய் படுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவில் இருந்தே பரவியது என்பது பலரது வாதமாக இருந்து வருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பலவாறு உருமாற்றம் அடைந்து பரவிய அந்த தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளும் வந்துவிட்டன. இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றமான ஒமிக்ரான் தொற்று பல நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக தடம் பதிக்க தொடங்கியுள்ளது. தென்னாபிரிக்கா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றுக்கு காரணமாக கூறப்படும் சீனாவில் முதல் முதலாக ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.