சென்னை: தமிழக டிஜிபி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்ற கழக தலைவர் சிவக்குமார் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலாயத்தில் பேட்டி அளித்தார். அதில், டிஜிபியின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லை, சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி உள்ளார் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.