விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கண்டித்து ஜெய்ப்பூரில் இன்று காங். பிரமாண்ட பேரணி: ராகுல், பிரியங்கா தலைமையில் நடக்கிறது

ஜெய்ப்பூர்: ஒன்றிய பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் விலைவாசி, பணவீக்கம் உயர்ந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று பிரமாண்ட பேரணி நடக்க உள்ளது. ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத போக்கால் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி கிடைக்காததால் இப்போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மாபெரும் போராட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடக்க உள்ளது.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்பது குறித்து இன்று உறுதியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெய்ப்பூரில் திரண்டுள்ளனர். பேரணி குறித்து ராஜஸ்தான் மாநில கட்சியின் பொறுப்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், ‘பணக்காரர்களாக ஆகிறார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக் கொண்டுள்ளனர். எனவே பாஜ அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: