ரூ.25 கொடுக்காததால் தகராறு: குடிபோதையில் கட்டிட தொழிலாளி இரும்பு ராடால் அடித்துக்கொலை: சக தொழிலாளி கைது

ஆவடி: ஆவடியில் ரூ.25 கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் கட்டிட தொழிலாளி இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். ஆவடி, ஆனந்தம் நகர், புலவர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (50). இதே பகுதி, கண்ணகி தெருவை சேர்ந்தவர் பூபதி (25). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். மேலும், நண்பர்களான இருவரும் தினமும் ஒன்றாக வேலைக்கு சென்று வீடு திரும்புவர் இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிவகுமார், பூபதி இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றனர்.

பின்னர், இருவரும் ஆவடி, காமராஜர் நகர், முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கட்டட பணியில் ஈடுபட்டனர்.  மாலை வேலை முடிந்ததும் சிவகுமாருக்கு, பூபதி ரூ.1000  கூலி பணத்தை கொடுத்துள்ளார். அப்போது, சிவக்குமார் வீட்டு உரிமையாளர் கொடுத்த சாப்பாடு பணம் ரூ.100 எனக்கு தரவேண்டும் என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், ரூ100பணத்தை சிவகுமாருக்கு, பூபதி கொடுத்துள்ளார். இதன் பிறகு, அவர்கள் இருவரும் காமராஜர் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். மேலும், மது அருந்த இருவரும் பணத்தை பங்கிட்டு கொண்டனர். அதில், மீதி ரூ. 25 பணத்தை சிவகுமாருக்கு, பூபதி கொடுக்க வேண்டும். ஆனால், அவர் கேட்டும் பூபதி பணம் கொடுக்கவில்லை.

இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் தகராறு செய்தபடி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வீட்டருகே வந்ததும் சிவகுமார், பூபதியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்து வந்து பூபதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பூபதிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பூபதி இரும்பு ராடை பிடுங்கி, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில்,  மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் சிவகுமார் தரையில் விழுந்தார். இதோடு ஆத்திரம் தீராத பூபதி அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து மீண்டும் சிவகுமாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிவகுமார் உயிருக்கு போராடினார். பின்னர்  பூபதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

உறவினர்கள் விரைந்து வந்து சிவகுமாரை மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலமாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிவகுமார் இறந்ததாக தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பிறகு, போலீசார் தனிப்படை அமைத்து பூபதியை தேடினர். பின்னர், தனிப்படை போலீசார் நேற்று காலை தலைமறைவாகி இருந்த பூபதி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், தீவிர விசாரணைக்கு பிறகு பூபதியை போலீசார் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Stories: