லக்னோ: ஒமிக்ரான் கொரோனா பரவலை தடுக்க உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் வரும் ஜனவரி 5ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்தியாவில் 20க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பாதிப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கிடையே ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தென் ஆப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மூன்றாவது அலை வந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது எனவும் மூன்று வாரங்களில் நிலைமை மாறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மூலம் ஒமிக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து லக்னோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜனவரி 5ம் தேதி வரை லக்னோ மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அந்த நேரத்தில் காவல்துறை அனுமதியின்றி 5 பேருக்கு மேல் கூடகூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வரவிருக்கும் தேர்வுகளை கருத்தில் கொண்டு, சமூக விரோதிகள் மற்றும் மோசடியில் ஈடுபடுபவர்களை தடுக்க, யுபிசிஎஸ், பிஎஸ்சி அல்லது அரசு தொடர்பான தேர்வு மையங்களில் போலீஸ் படை நிறுத்தப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசு இரு தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.