திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாதத்தில் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாசுரம் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் மார்கழி மாதம் 1ம் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடியபடி சுவாமியை துயில் எழுப்பக்கூடிய பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மார்கழி மாதம் வரும் 16ம்தேதி மதியம் 12.26 மணிக்கு தொடங்குவதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 17ம்தேதி முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தாயார் அருளிய திருப்பாவை ஜீயர்கள் முன்னிலையில் பாடப்பட்டு சுவாமியை துயில் எழுப்பப்படவுள்ளது.