சிவகாசி : சிவகாசியில் கனமழைக்கு 10 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. மேலும், பழமையான வாகை மரம் முறிந்து விழுந்தது. சிவகாசி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதில், வெள்ளையாபுரம், விஸ்வநத்தம், மாரனேரி, அனுப்பன்குளம், சாமிநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களில் 10 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. சேதம் அடைந்த பகுதிகளை தாசில்தார் ராஜகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமராஜ் மற்றும் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 500 நிவாரண நிதியை தாசில்தார் ராஜகுமார் வழங்கினார்.