கல்லூரி மாணவர் சந்தேக மரணத்தில் உடனடியாக உரிய நீதி விசாரணை வேண்டும்; தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.!

சென்னை: கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து ஆற்ற முடியாதப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என அவரது பெற்றோரும், பொதுமக்களும் தெரிவிக்கும் ஐயப்பாட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும். காவல்துறையின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவ்வப்போது மரணமடைவதும் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் நடந்தேறியிருக்கிற தம்பி மணிகண்டனின் மரணம் கொலையாக இருக்கலாம் எனும் வாதத்தில் அடிப்படையில்லாமலில்லை. ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: