சென்னை: கிராமங்கள்தோறும் சென்று தலா 10 பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று புதிய மாவட்ட செயலாளர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய மாவட்ட செயலாளர்களாக பொறுப்பேற்றுள்ள நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய முதன்மைப் பணி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு அல்லது மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் சென்று நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்திப்பது தான்.