வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை: ஆய்வு செய்த எம்எல்ஏ தகவல்

வாணியம்பாடி:  வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு செய்த எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்தார். வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாலும், கணினி மையம் உட்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கட்டிடத்திற்குள் இறங்குவதாலும் மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி, அங்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ  கோ.செந்தில்குமார் நேற்று பள்ளிக்கு சென்று, பழுதடைந்த கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பள்ளிக்கு தேவையான புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தரவும், பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து தரவும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தலைமையாசிரியர்(பொறுப்பு) ஜெயக்குமாரி மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார். அப்போது, பள்ளி கட்டிடக்குழு தலைவர் ஜம்பு வன்னியன்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திருப்பதி,  என்.பி.செல்வம், சவுந்தர், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், ராமசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: