பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50  கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம்,  மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம்,  கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம்.

மிளகு 50 கிராம், புளி 200 கிராம்,  கடலைப்பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை ரூ.2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப  அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் மொத்தம் ரூ.1088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 செலவில் அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்  வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க ஆணைகள்  வெளியிடப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் ரூ.2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், கூடுதலாக கரும்பும் சேர்த்து வழங்க, கரும்பு ஒன்றுக்கு ரூ.33 வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மொத்தம் ரூ.71,10,85,980 செலவில் வழங்கலாம்.

கரும்பினை கொள்முதல் செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்மந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழு அமைத்திட உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பான 20 பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம் மற்றும் ஏலக்காய் 10 கிராம் ஆகியவைகளை மட்டும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகள் மூலம் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: