சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் 4 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கத்தில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களிலும் , குரோம்பேட்டை, போரூர் உள்ள கடைகளிலும்   4 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது.  பகுதிகளில் கிளைகள் உள்ளன.

 கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினத்திற்கு சொந்தமான 12 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் சோதனையில் கடந்த 2 ஆண்டுகளில் கடைகளில் நடந்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்கள், மற்றும் கடைகளின் மேலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணா செல்வரத்தினம் நகைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட நகைகள் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ஆவணங்களை வைத்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்தும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறையின் 4 நாள் சோதனையால் நேற்றும் பொருட்களை வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கடைகளில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறகு தான் எவ்வளவு கோடி மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: