சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் திட்டங்களை விரைவாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவோம்: மேலாண்மை குழு ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் சென்னையில் ஏற்படும் மழைவெள்ளத்தை நிரந்தரமாக தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருப்புகழ் தலைமையிலான ஆலோசனை குழு மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  

அப்போது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும் அவரை திறன்பட வெல்லக்கூடியதாக தமிழக அரசும், அதனுடைய நிர்வாகமும் இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முன்பு ஏற்பட்ட இறப்பு மற்றும் பாதிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிகவும் குறைவு தான். நான் உழைத்தேன். காலை, மாலை என இரவு பகல் பாராமல் மழையில் நனைந்தபடியும் மக்களை சந்தித்தேன் என ஊடகங்கள் நம்மை இன்று பாராட்டிகொண்டிருக்கிறது. பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட பாராட்டாக நான் கருதவில்லை.

தமிழ்நாடு அரசே மழையில் நனைந்து மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்த பாராட்டை நான் பார்க்கிறேன். இதுபோன்ற பேரிடர் ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொது சொத்துக்கள், உள்கட்டமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை வெகுவாக குறைத்து தமிழ்நாட்டை அனைத்துவகை பேரிடர்களில் இருந்து திறம்பட எதிர்கொள்ள முடியும், அதற்கான திட்டமிடல்களை தொடங்குவதற்கான கூட்டம் தான் இது. பேரிடர் தடுப்பு பணிகள் என்பது பேரிடர் காலங்களில் மக்களை காப்பது மட்டும் அல்ல. அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை ஏற்படுத்துவது தான் மிக மிக முக்கியமானது. இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும். அதற்காக தான் திருப்புகழ் தலைமையில் இந்த குழு அமைத்துள்ளோம்.

சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழுவில் உள்ள நீங்கள் விரிவான திட்டங்களை உடனடியாக அரசுக்கு வழங்க வேண்டும். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநில பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். வெள்ளத்தடுப்பு மட்டுமின்றி, நீர்மேலாண்மை குறித்து திட்டம் தீட்டி வழங்க வேண்டும். பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும்.

நான் தூத்துக்குடி சென்றபோது அதிகாரிகள் தெரிந்துகொண்டிருப்பதை விட அப்பகுதி மக்கள் நிறைய தெரிந்துவைத்துள்ளார்கள். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்மூலமாக ஏற்பட்ட விளைவின் காரணமாக தான் தி.நகரின் மழைநீர் தேங்கியது. இதேபோல் தான் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குகிறேன் என்று சொல்லி அங்கு கால்வாய்களை அடைத்து வைத்துள்ளார்கள். சென்னையில் அதிக மழை பெய்தால் தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகையான வடிகால் அமைப்பு முறை இல்லை.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடல் தேவை. இவை அனைத்தும் செய்தாக வேண்டும். திட்டமிடல் மேற்கொள்ள பல மாதங்கள் எடுத்துக்கொள்ள கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்திக்காட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories: