தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை பாதித்த இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கடந்த சில தினங்களாகவே தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம் போன்ற இடங்களில் அதிகளவில் மழை பொழிவு இருந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து முதல் இடமாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள ப்ரையன்ட் நகரில் தண்ணீர் தேங்கிய பகுதியில் ஆய்வு நடத்தினார். அச்சமயம் முதல்வரிடம் பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை எவ்வாறு அகற்றுகிறீர்கள் என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் மற்றும் மாநகர கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோரிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும் மழைநீரை துரிதமாக வெளியேற்ற எவ்வித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அவர் கேட்டறிந்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்தால் அதனை வெளியேற்றுவதற்கான திட்டம் குறித்தும் பேசினார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அதிகாரிகள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாநகராட்சியில் பெய்த கனமழையால் வெள்ளநீர் வீடுகளுக்குள் சூழ்ந்துள்ளதால் அதனை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 பேருக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். 

Related Stories: