பொழுதுபோக்கு கிளப்களில் காவல்துறை தலையீடு, தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைக்கு தீர்வுக்காக சிசிடிவி கேமரா பொருத்தலாம்!: ஐகோர்ட் யோசனை

சென்னை: பொழுதுபோக்கு கிளப்களில் காவல்துறை தலையீடு, தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைகளின் தீர்வுக்காக ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை அளித்துள்ளது. தங்கள் பொழுதுபோக்கு கிளப்களில் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம். நகரை சேர்ந்த விளையாட்டு, பொழுதுபோக்கு கிளப் மற்றும் சென்னை வடபழனி 5 ஸ்டார் கிளப் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கிளப்புகளுக்கு வரும் உறுப்பினர்களில் சிலர் தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாகவும், அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி பெரும்பாலான மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் காவல்துறை இடையூறு ஏற்படுத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில், தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக புகார்கள் வந்தால் அவர்களை கண்காணிக்க மட்டுமே பொழுதுபோக்கு கிளப்புகளில் சோதனை செய்வதாகவும், அன்றாட நடவடிக்கைகளில் தலையிடம் நோக்கம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி  தடை செய்யப்பட்ட ரம்மியை விளையாடுவதாக உறுப்பினர்களுக்கு எதிராக புகார்கள் வராத நிலையில், கிளப்புகளுக்குள் செல்வதில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கிளப் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதாக தொடர்ந்து புகார்கள் வருவதால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், தவறான நடவடிக்கைகள் போன்ற பிரச்சனைகளின் தீர்வுக்காகவும் கிளப்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தலாம் என பரிந்துரை செய்தார்.

அவ்வாறு கிளப்களில் பொருத்தப்படும் சிசிடிவிகள் உறுப்பினர்களின் தனி உரிமையையும், காவல்துறை விசாரணையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறினார். இது தொடர்பாக உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க தகுந்த நபராக தமிழக டிஜிபி இருப்பதால், அவரை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்தும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் பரிந்துரையை அமல்படுத்த முடியுமா? அதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து உறுதியான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Stories: