திருமங்கலம்: திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ளது திருப்பதி வெங்கடாஜலபதி நகர், கலைநகர் மற்றும் மதுராசிட்டி நகர் பகுதிகள். சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்த பகுதியில் விடத்தகுளம் ரோட்டிலிருந்து மதுராசிட்டி நகர், கலைநகர் பகுதிக்கு செல்லும் 30அடி சாலை மண்சாலையாக இருந்து வருகிறது. மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக சாலை அமைந்துள்ளது. மேலும் இரவு வேளையில் தெருவிளக்குகள் எதுவும் இல்லாததால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெங்கடாஜலபதி நகரிலிருந்து மதுராசிட்டி நகர் பகுதிக்கு செல்லும் மண்சாலை முழுவதும் மழைநீரால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தினசரி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.