புதிய வகை கொரோனா; நாட்டு மக்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக இருக்க வேண்டும்: ராகுல் ட்வீட்

டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்த புதிய  ’ஒமிக்ரான்’  (B.1.1.529) வகை கொரோனா  உலக  நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய வைரஸ் பாதித்து இருக்கிறது. புதிய வகை கொரோனா மிகவும் அச்சுறுத்தலானது.  நாட்டு மக்களுக்கு தடுப்பூசி  பாதுகாப்பை அளிப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக  இருக்க வேண்டும். குறைந்த  அளவில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கையை வெளியிடுவதில் எந்த வித ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், வரும் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்க மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ள சூழலில், புதிய வகை கொரோனா மிரட்டுவதால்  சர்வதேச விமான போக்குவரத்துக்கு சேவையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதை ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்பூசி செலுத்துவதில் இந்திய அரசு கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: