சென்னை: ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என அமமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமமுக தலைமைகழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும், இப்போதும் ஒவ்வொரு கணமும் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நினைவு நாளான வருகிற 5.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கவிருக்கிறோம்.