பொன்னேரி: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் நிலையின் 1வது மற்றும் 2வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நேற்றுமுன்தினம் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.