சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழு கடந்த 21ஆம் தேதி ஞாயிறன்று சென்னை வந்தது. இந்த குழு இரண்டாக பிரிந்து ராஜீவ் சர்மா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு மற்றும் ஆர்.பி. கவுல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு என இரண்டாக பிரிந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.