செங்கல்பட்டு: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாலாற்றின் கரையோரம் உள்ள திம்மாவரம் மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், படவேட்டம்மன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பாலாற்றின் கரையோரம் உள்ள மேலமையூர் ராமகிருஷ்ணா நகர், ஆத்தூர், வில்லியம்பாக்கம், பாலூர், மணப்பாக்கம், ஒழலூர், வல்லிவலம், வாயலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சில நாட்களாக பாலாற்று வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 27 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.