ஓசூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப் பதும் குறைவதுமாக உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 2,760 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 2,563 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 3060 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.33 அடிக்கு தண்ணீர் உள்ளது. கர்நாடகாவிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரக்கூடிய நீரில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதால் கெலவரப்பள்ளி அணைக்கு வரக்கூடிய நீர், நுரைபொங்கி காட்சியளிக்கிறது. ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை கடக்கவோ, வாகனங்கள் மற்றும் கால்நடைகளை கழுவவோ செல்ல வேண்டாமென்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.