திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபதற்கான கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தனர்.இந்த நிலையில் தீப திருவிழாவின் நிறைவு நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையின் முன் பரணி தீபமும் மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.