பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே தொகுப்பு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், 2 பேர் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த மேளப்பூடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கட்டி தந்த தொகுப்பு வீடுகளில் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது, தொகுப்பு வீடுகள் பலவீனமடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில், மீனாட்சி (60) என்பவரின் தொகுப்பு வீடு நேற்று காலை திடீரென மேல் தளம் இடிந்து விழுந்து நொறுங்கியது. அப்போது, வீட்டில் இருந்த மூதாட்டி மீனாட்சியின் உறவினர்கள் தனபால் (40), விக்னேஷ் (25) ஆகிய இருவருக்கும் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள் மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பலவீனமடைந்துள்ள நிலையில் மழைக்காலத்தில் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, தமிழக அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.