ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் ஒருதலைபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதன் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கை, சென்னை  உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்த மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.  இந்நிலையில், நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்ேபாது, அப்பல்லோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ‘‘, எங்கள் நற்பெயர் குறித்து அவர்கள் யோசிக்கவில்லை.

அதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் மொத்த வழக்கு விசாரணையையும் ரத்து செய்ய வேண்டும். ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைகள் குறித்த மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவை. ஆனால், ஆணையத்திடம் 4 பேர் கொண்ட குழு மட்டுமே உள்ளது,’ என வாதிட்டார். தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித் குமார், அரிஸ்டாட்டில், ‘ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடக்கிறது என்ற வாதத்தையை ஏற்க முடியாது. அந்த பேச்சுக்கே இடமில்லை. ஆணையத்தில் எந்த மாற்றங்களும் செய்யக்கூடாது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரையில் இந்த ஆணையத்தில் 143 அமர்வுகள் விசாரிக்கப்பட்டுள்ளன.

விசாரணை ஒரு தலைபட்சமாக நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஆணையம் மீது அப்பல்லோ நிர்வாகம் கூறியது சாதாரண குற்றச்சாட்டுகள் கிடையாது. அதற்கான அனைத்து பதில்களும் எங்களிடம் உள்ளது,’ என வாதிட்டனர். பின்னர், ஆறுமுகசாமி ஆணையம் தரப்பிலும் இதே வாதம் செய்யப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘தமிழகத்தில் தற்போது அரசு மாறியுள்ளது, அதனால், இந்த விவகாரத்தில் புதிய அரசும் இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே இருக்கிறதா? அல்லது ஆணையத்தில் மாற்றங்கள் செய்ய விரும்புகிறதா?’ என கேட்டார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ‘இந்த ஆணையம் விட்டுப் போன விசாரணையை, அதே இடத்தில் இருந்து தொடர்ந்து நடத்தத்தான் வேண்டும் என்பதுதான் விருப்பம். இருப்பினும், இது தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தி மீண்டும் தெரிவிக்கிறோம்,’ என பதிலளித்தார். பின்னர், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: