பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே மழைநீரை வெளியேற்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியதால், அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதுபோல் கொட்டித் தீர்த்த கன மழைக்கு பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதில், வீரமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற வசதியின்றி மழைநீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, ஆர்கே பேட்டை வட்டாட்சியர் மணிவாசகம் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பாதுகாப்புடன் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடுகளுக்கு அருகில் சுற்றுச்சுவரை உடைத்து மழைநீர் வெளியேற்றும் வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.