பட்டாசு குடோன் வெடி விபத்து 2 உடல்கள் மீட்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ரிசர்வ் லைன் சிலோன் காலனியில் ராமநாதன் (44) என்பவருக்கு சொந்தமான  பட்டாசு பேப்பர் குழாய் கம்பேனியில் நேற்று முன்தினம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் நேற்று காலை மீண்டும் துவங்கியது. இடிபாடுகளை சுற்றி 200 மீட்டர் தொலைவில் வசித்து வருபவர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் சென்று தங்கிட அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் பாதுகாப்பு உபகரணங்களுடன் 4 பொக்லைன் வாகனங்கள், 5 தீயணைப்பு வாகனங்கள்  மூலம் மீட்பு பணிகள் துவங்கியது. பேரிடர் மீட்பு குழுவினர் 10 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணியளவில் குடோனில் வேலை பார்த்த கார்த்தீஸ்வரி(33), திருப்பதி நகரை சேர்ந்த ஹமீதா(55) ஆகிய இருவரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டது.

Related Stories: