திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். நேற்று காலை இவரது வீட்டில் இருந்த கிணற்றின் அருகில் உள்ள புதரில் இருந்து வந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தது. இதைக் கண்ட அவர் உடனடியாக திருவூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர்கள் தனசேகர், குமரகுரு, ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி அந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டனர்.