விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் வைத்திருப்போரும் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில், தகுதியுள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

மேலும், தகுதியுள்ள நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எதிர்மனுதாரரின் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை என்றும், எனவே இந்த மனுவை முடித்து வைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளதால், இந்த மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: