போச்சம்பள்ளி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்-விவசாயிகள் அதிர்ச்சி

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி பகுதியில் பலத்த மழைக்கு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், 2ம் போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடிக்காக வயலை சீர் செய்து நாற்றுகள் நடவு செய்தனர். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நேரத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் தண்ணீர் முழ்கியுள்ளது.

போச்சம்பள்ளி அருகில் உள்ள பாரூர், பனங்காட்டூர், பழனம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வேளையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: