குளச்சல் : குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் தொடங்கியும் குறைவாக கிடைப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவை மூலம் கணவாய், இறால், கேரை, சுறா, நெய் மீன், சூரை மற்றும் நெத்திலி, சாளை, வெளமீன் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன் வகைகள் தவிர ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தோடு எனப்படும் ‘சிப்பி’மீன்கள் பிடிக்கப்படுகிறது. முத்து குளிக்கும் மற்றும் மூச்சு பயிற்சி பெற்ற மீனவர்கள் கடல் பாறை பகுதிகளில் நீருக்கு அடியில் சென்று பாறையில் ஒட்டியிருக்கும் சிப்பி மீன்களை எடுத்து வருவர். குமரி மாவட்டத்தில் குளச்சல்,கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இனயம், மேல்மிடாலம் ஆகிய கடலோர கிராமங்களில் மீனவர்கள் சிப்பி மீன் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.