காரின் கதவுகளை திறந்து பெங்காலி நடிகரின் ஏடிஎம் கார்டு திருட்டு: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெங்காலி நடிகரின் காரை திறந்து அவரது பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெங்காலி நடிகர் சாஹேப் பட்டாச்சார்யா, பபானிபூர் காவல் நிலையம் அருகே உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். முன்னதாக தனது காரை உடற்பயிற்சி மையத்திற்கு வெளியே விட்டு விட்டு உள்ளே சென்றார். ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி மையத்தில் இருந்துவிட்டு, மீண்டும் வெளியே வந்தார். அப்போது தனது காரின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே காரின் உட்பகுதியை பார்த்த போது, அவர் வைத்திருந்த பணப்பை, ஏடிஎம் கார்டுகள் ஆகியன திருடப்பட்டு இருந்தன. சுற்றுமுற்றும் விசாரித்தும், திருட்டு சம்பவம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதனால், பபானிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து பபானிபூர் போலீசார் மர்ம நபர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் கூறினர். நடிகரின் காரில் இருந்த பணம், ஏடிஎம் கார்டுகள் திருடப்பட்ட சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: