பரமத்திவேலூர் : பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், மரவபாளையம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை, கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல், காவிரியின் கிளை நதியான சேலம் திருமணிமுத்தாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் வழி நெடுகிலும் உள்ள ஏரி, குளங்களை நிரப்பி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடும்பன் குளம் ஏரியை வந்தடைந்தது. நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரிப்பால் இடும்பன் குளம் ஏரி நிரம்பி மாறுகால் பாய்கிறது.