விராலிமலை: குடுமியான்மலை அருகே மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் இடுப்பளளவு கண்மாய் நீரை கடந்து மிகுந்த சிரமங்களுக்கிடையே சடலங்களை தோளில் சுமந்து கொண்டு சென்று அடக்கம் செய்யும் துயரம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் நிலையில் தங்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை அருகே உள்ள எழுவச்சிப்பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவ்வூரில் இறப்பவர்களில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. அதற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல காடுகள், மழைகாலங்களில் நிரம்பும் கண்மாய் நீரை கடந்த மிகுந்த சிரமங்களுக்கிடையே கிராமத்தில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அப்பகுதி மக்கள் அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது.