பள்ளிப்பட்டு அருகே பயங்கரம் எஸ்கேஆர் பேட்டை ஊராட்சி மன்ற துணை தலைவியின் கணவர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜிபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(37). அவரது மனைவி விஜயா எஸ்.கே.ஆர்.பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக உள்ளார். இந்நிலையில், ஊராட்சியில் கடந்த வாரம் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவி குமாரியின் கணவர் பொன்னுசாமிக்கும், துணைத் தலைவி விஜயாவின் கணவர் ரமேஷுக்கும் இடையே ஊராட்சி சம்பந்தபட்ட பிரச்னை பற்றி பேசும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களுக்குள் தள்ளுமுள்ளும் நடைபெற்றுள்ளது. இதனால், அன்று முதல் ரமேஷ் மன வேதனையில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை நெடியம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மர்மமான முறையில் ரமேஷ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ  இடத்திற்கு ரமேஷ் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள்  விரைந்து வந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிப்பட்டு போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து, ரமேஷ் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் சாவில் மர்மம் இருப்பதாகவும், உடலை வாங்க மறுத்து திருத்தணி மருத்துவமனையை முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய சமரச பேச்சுவார்தையில் சிறிது நேரம் கழித்து உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த பள்ளிப்பட்டு போலீசார் பல கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: