ஆனைமலை அருகே ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு: சத்துணவு கூடத்தின் மீது மரம் முறிந்து விழுந்தது

ஆனைமலை:  ஆனைமலை அருகே உள்ள பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கி தவித்த கோயில் காவலர்கள் இருவரை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழியாறு, பாலாறு ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது.

கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால், கோயிலுக்குள் இருந்த இரவுக் காவலர்கள் மகாலிங்கம், திருமலைசாமி ஆகிய இருவர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி கயிறு கட்டி இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். தொடர் மழை காரணமாக ஆழியாறு மற்றும் பாலாறு ஆற்றுப்படுகைகளில், காட்டாற்று வெள்ளம் வருவதால், ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சத்துணவு கூடம் சேதம்: தொடர் மழை காரணமாக அங்கலகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நின்றிருந்த பழமையான மரம்  ஒன்று முறிந்து சத்துணவுகுடோன் மீது விழுந்தது.  இதில் கட்டிடம் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தின்போது உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: