உத்தமபாளையம்: உத்தமபாளையம் யுனியன் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிமுகவைச் சேர்ந்த யூனியன் சேர்மன் ஜான்சி வாஞ்சிநாதன், பதவி இழந்த நிலையில், யூனியன் துணை சேர்மன் மூக்கம்மாள் கெப்புராஜ் தலைமையில் கூட்டம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐயப்பன் (வ.ஊ), திருப்பதி வாசகன் (கி.ஊ), ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் உ.அம்மாபட்டி திமுக கவுன்சிலர் பாபு என்ற அறிவழகன் பேசுகையில், ‘தமிழகத்தில் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார்.
கொரானா நிவாரணமாக ரூ.4000, மகளிருக்கு இலவச பஸ் பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி இலவச நிவாரண பொருட்கள் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசை பாராட்டியும், இதேபோல், கம்பம் தொகுதியில் அடிப்படை தேவைகளாக உள்ள தெருவிளக்கு, சாக்கடை, சாலை வசதிகள் செய்திட மிக முக்கியத்துவம் கொடுத்து உழைத்துவரும் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.
இதனை அனைத்து திமுக கவுன்சிலர்களும் ஏகமனதாக வலியுறுத்தியதால் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் மதன்குமார், ராயப்பன்பட்டியில் கழிப்பறை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.