சென்னை: மனிதர்கள் ஒழுக்கத்தில் மட்டுமே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என முழங்கியவர் என முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே என் தேசத்துக்காகவே தவிர எனக்காக அல்ல என்று வாழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். தனது தேகத்தையே தேசத்துக்காக ஒப்படைத்தவர் அவர். மனிதனை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் பெயரால் மட்டுமே மரியாதை கொடுக்க வேண்டுமே தவிர, சாதியால் அல்ல என்று சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக முழங்கியவர் பசும்பொன் தேவர் திருமகனார். அனைவருக்குமான தலைவர் அவர். பக்குவப்பட்ட ஒருவன், இந்து கோயிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிறித்துவ வளாகத்தில் வைக்கிற மெழுகு வர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் உடலின் இருட்டை போக்க எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் வடிவமாக காண்பான் என்று சொன்ன மதநல்லிணக்க மாமனிதர்.