மோடி பலம் பெற காங்கிரஸ் காரணம்: மம்தா குற்றச்சாட்டு

பனாஜி:  ‘காங்கிரஸ் தீவிர அரசியலில் கவனம் செலுத்த தவறியதால்தான் மோடி மேலும் பலம் வாய்ந்தவராக மாறி வருகிறார்,’ என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். கோவாவில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 40 தொகுதியிலும் போட்டியிடுகிறது. இதன் பிரசாரத்துக்காக இக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, கோவாவுக்கு 3 நாள் பயணம் சென்றுள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், பனாஜியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் சரியான முடிவு எடுக்காததால் இந்த நாடு பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அரசியலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, நான் இப்போது எதையும் கூற முடியாது. காங்கிரசால் மோடி இன்னும் பலம் வாய்ந்தவராக மாறப் போகிறார்.  கடந்த காலங்களில் காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைத்தது. பாஜ.வை எதிர்த்து  போட்டியிடுவதற்கு மாறாக, என்னுடைய மாநிலத்தில் எனக்கு எதிராக போட்டியிட்டது.  ஒருவரால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை என்பதற்காக, இந்த நாடு ஏன் பாதிக்கப்பட வேண்டும்?” என்றார்.

Related Stories: