மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்; முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை: கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர்: மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (58). அதே பகுதியை சேர்ந்த 11 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமி, சென்னையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் படித்து வந்தார். அந்த சிறுமி விடுமுறைக்கு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, மாரிமுத்து அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள கத்தரிக்காய் தோட்டத்துக்கு அழைத்து சென்று, தீப்பெட்டியை காட்டி கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் மாரிமுத்துவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு நலவாழ்வு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Related Stories: