ஸ்ரீவைகுண்டம்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 135.10 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 1404.75 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவை தவிர கடனா, ராமநதி, கருப்பாநதி குண்டாறு, அடவி நயினார் ஆகிய அணைகளின் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து பாபநாசம் அணையின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் கடலுக்கு செல்கிறது. மேலும் அணையின் 18 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.