லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்திருக்கிறார். உ.பி தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை ஒட்டி பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அதன்படி உ.பி-யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல் - கோதுமை கொள்முதல் விலை உயர்வு, பள்ளிப் படிப்பு முடித்த மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஏற்கனவே பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார்.