நாடு முழுவதும் எங்கும் பெறலாம் பயன்படுத்திய கார்களை வாங்க பொதுச்சேவை மையத்தில் என்ஓசி: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ‘பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கு அரசு இ-நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொதுச்சேவை மையத்தில் தடையில்லா சான்றிதழ் பெறலாம்,’ என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் பயன்படுத்திய வாகனங்கள் விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. இந்த வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் உண்மையான உரிமையாளரை அறிவதற்கும், அந்த வாகனத்தின் மீது எந்த வழக்கும் இல்லை என்று உறுதி செய்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஒன்றிய அரசு பொதுச்சேவை மையத்தின் மூலம் தடையில்லா சான்று வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சேவையை தேசிய குற்ற ஆவண கழகத்தின் இயக்குனர் ராம்பால் பவார் முன்னிலையில் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தொடங்கி வைத்தார். இந்த பயன்பாட்டுக்காக, நாட்டில் இயங்கும் 4 லட்சம் பொதுச்சேவை மையங்கள், தேசிய குற்ற ஆவண கழகத்துடன் இணைக்கப்படும். மேலும், மாநில அரசுகளின் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு நெட்வொர்க் டிஜிட்டல் போர்ட்டல்கள் இத்துடன் ஒருங்கிணைக்கப்படும். எனவே, நாட்டில் உள்ள 4 லட்சம் பொதுச்சேவை மையத்தில் எங்கு வேண்டும் என்றாலும் தடையில்லா சான்றை மக்கள் பெறலாம். இதனால், பயன்படுத்திய வாகனங்களை வாங்கும் மக்களின் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடையில்லா சான்றிதழ் இருந்தால் தான், வாகன உரிமையாளர் பெயரை சாலை போக்குரவரத்து ஆணையகம் மாற்றிக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: