தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தர அரசாணை கோரி வழக்கு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த சோழசூரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் செயல்படும் ரயில்வே மற்றும் தபால்துறை பணிகளில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே நியமிக்கப்படுகின்றனர். திருச்சி ரயில்வே பணிமனையில் 1,765 நபர்களுக்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சுமார் 1,600 பேர் வரை வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது அரசாணை பிறப்பிக்குமாறோ அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர், ‘‘குறிப்பிட்ட மாநிலத்தவருக்கு பணியில் முன்னுரிமை என்பது சட்டவிரோதம் ஆகாதா’’ என்றனர். மனுதாரர் தரப்பில், ‘‘பல்வேறு மாநிலங்களில் அரசாணைகள் உள்ளன. அவற்றின் விபரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நவ. 10க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: