சேலம்: சேலம் உள்பட 27 மாவட்டங்களில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது. டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் 4 லட்சத்து 65 ஆயிரம் லாரிகள் இயங்கி வருகிறது. கடந்த பிப்ரவரியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயர்ந்து, தற்போது பெட்ரோல் லிட்டர் 103க்கும், டீசல் சேலம் உள்பட 27 மாவட்டங்களில் 100 ரூபாயையும் தாண்டியுள்ளது. இந்த நிலையில் டீசல், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளின் விலை உயர்வால் பல உரிமையாளர்கள் லாரிகளை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறியதாவது:சமீப காலமாக லாரி தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா 2வது அலை பரவியது. இதனால் லாரிகள் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.