முழுக் கொள்ளளவை எட்டிய தாமல் ஏரி: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு  ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 909 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பெரும்பாலான ஏரிகள் தற்போது நிரம்பி வருகின்றன.

இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை, தூர்வாரி சீரமைக்க வேண்டும் என எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் உத்தரவிட்டார். அதன்படி கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது.

தற்போது தாமல் ஏரி தனது முழு கொள்ளவை எட்டி கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. கலங்கல் வழியாக வெளியேறும் நீரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆனந்த குளியல் போடுகின்றனர். இந்நிலையில், நிரம்பி வழியும் தாமல் ஏரியை எம்எல்ஏ எழிலரசன், நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவசாயிகளுடன் சேர்ந்து மலர்தூவி கலங்கல் வழியாக வெளியேறும் நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். தாமல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், பாசன வசதி பெறும் தாமல், முசரவாக்கம் பாலுசெட்டி சத்திரம் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: