நவீன தொழில்நுட்பத்துடன் கீழடியில் திறந்தவெளி கண்காட்சி: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு தளங்களில் கடந்த பிப். 13ம் தேதி தொடங்கிய 7ம் கட்ட அகழாய்வு பணிகள்  செப். 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான்கு அகழாய்வு தளங்களையும், ரூ.12 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தையும் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘கீழடியில் நவீன தொழில்நுட்பத்துடன் திறந்தவெளி தொல்லியல் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது.

இங்கு கிடைத்த தொல்லியல் பொருட்களில் வெள்ளி நாணயம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அது மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். கீழடியில் கண்டறியப்பட்ட உறைகிணற்றில் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆறாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பானை ஓட்டிலும் மீன் உருவம் உள்ளது. இரண்டுக்கும் உள்ள கால ஒற்றுமைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கீழடியில் முதன்முதலாக திறந்தவெளி கண்காட்சி நவீன தொழில் நுட்பத்துடன் அமையவுள்ளது என்றார்.

Related Stories: